பாகிஸ்தான் ராணுவத் தளபதியை தீர்த்துக் கட்ட திட்டமிட்ட இஸ்ரேல்.. பரபரப்புத் தகவல்
டெல்லி: ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் திட்டமிட்டதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல சர்வதேச அரசியல் விமர்கரும், பிரேசில் நாட்டுப் பத்திரிகையாளருமான பேப் எஸ்கோபார் சமூக ஊடகத்தில் வெளியிட்ட நேர்காணல் ஒன்றில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியுள்ள முக்கிய விவரங்கள் அதிர வைப்பதாக உள்ளது..
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவின் பேரில், சுவிட்சர்லாந்திற்குப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் அவரது குழுவினரைக் குறிவைத்து மொசாத் அமைப்பு ஒரு ரகசியத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டது.
இந்தச் சதித் திட்டம் குறித்த நம்பகமான தகவல்களைப் பாகிஸ்தான் ராணுவப் புலனாய்வுத் துறை முன்கூட்டியே கண்டறிந்து, மொசாத்தின் திட்டத்தைத் முறியடித்தது.
இச்சதி அம்பலமானவுடன், பாகிஸ்தான் தனது தூதர்கள் வழியாக (குறிப்பாக ஓமன் நாட்டின் உதவியுடன்) இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. எங்கள் பிரதிநிதிகள் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், இஸ்ரேல் என்ற நாடே உலக வரைபடத்தில் இல்லாதவாறு அழித்துவிடுவோம் எனப் பாகிஸ்தான் தரப்பில் எச்சரிக்கப்பட்டதாக எஸ்கோபார் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் அல்லது பாகிஸ்தான் அரசாங்கங்கள் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல், மாநாடு நடைபெற்ற சுவிட்சர்லாந்து நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளோ அல்லது அமெரிக்காவோ இது போன்ற அச்சுறுத்தல்கள் குறித்து பொதுவெளியில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், உலக நாடுகளின் தூதரக வட்டாரங்களில் இந்தத் தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.