புன்னகையில் வெற்றியைக் கொண்டு வா!

Su.tha Arivalagan
Aug 14, 2026,12:16 PM IST

- மீனா கணேஷ்


இனியவனே எழுந்திரு

புலர்ந்திடும் இந்தப் பொழுது

உனக்காகத்தான் . . . .


துணிந்தவனே துணைக்குவா

உன் இடர்களை களைந்து

வீர நடை போட்டு வா . . . . 


அன்பானவனே

அதிர்ந்த நடையோடு

அனைத்திலும் எழுந்துவா . . . 


நட்பானவனே

அத்தனையிலும்

துணையிருக்கிறேன் வா . . . 


புதிதானவனே

புன்னகையில் வெற்றியைக்

கொண்டு வா . . . 


தோழனே தோல்வி உனக்கில்லை

தோழமை இன்னும் கிடைக்கும் வா

தோற்காது வா . .




விமர்சிக்க முடியாதவனே

எந்த விமர்சனத்திலும்

அடங்காது உன் வெற்றி

அதனால் இன்னும்

விரைந்து வா . . . . 


வரிசை கட்டி நிற்கும்

தீபங்கள் உனக்குள்ளும்

நின்று வெற்றி ஒளியை வீசட்டும்

புத்தொளியாய் புறப்பட்டு வா . . . 


இன்னல்கள் நீங்கி

இன்முகத்தோடு வா

தொடரட்டும் உன்

வெற்றிப் பயணம்

தொடர்வேன் நானும் . . . . . 


ஒப்பில்லாதவனே

இந்த உலகத்தில் உனை

ஒப்பிட்டு பார்ப்பதற்கு

ஒன்றுமில்லை வா . . . . . !


(திருநெல்வேலியைச் சேர்ந்த மீனா கணேஷ், கவிஞர், சிந்தனையாளர், பாடகர் மற்றும் எழுத்தாளர்)