பிஆர்எஸ் கட்சியிலிருந்து கே.சி.ஆர் மகள் கவிதா நீக்கம்.. உறவினர்கள் மீது குற்றம் சாட்டியதால்!

Su.tha Arivalagan
Sep 02, 2025,04:48 PM IST

ஹைதராபாத்: தெலங்கானாவின் முக்கிய கட்சியான பி.ஆர்.எஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் முற்றி வெடித்துள்ளது. முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சியின் நிறுவனருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கும், அவரது அண்ணன் கே.டி.ஆருக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்து வந்த நிலையில் இப்போது கவிதாவின் நீக்கம் வந்து சேர்ந்துள்ளது.


கவிதா, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். கட்சியின் முக்கியத் தலைவர்களான ஹரீஷ் ராவ் மற்றும் சந்தோஷ் குமார் (இருவரும் அவரது உறவினர்கள்தான்) ஆகியோர் மீது கவிதா, ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 


ஹரீஷ் ராவும், சந்தோஷ் ராவும் கே.சி.ஆரின் பெயரை கெடுக்கும் வகையில் செயல்படுவதாகவும், முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாகவும் கவிதா குற்றம் சாட்டினார். காங்கிரஸ் அரசு, காளேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் முறைகேடுகள் இருப்பதாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை அடுத்து இந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. கவிதாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் பிஆர்எஸ் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




முன்னதாக இந்த ஊழல் குறித்து கவிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், கே.சி.ஆர் மீது ஏன் ஊழல் கறை படிந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். கே.சி.ஆருக்கு நெருக்கமான சிலர் அவரது பெயரை பயன்படுத்தி பல வழிகளில் பயனடைந்துள்ளனர். அவர்களின் தவறான செயல்களால் இன்று கே.சி.ஆரின் பெயர் கெட்டுவிட்டது. அதே நபர்களை ஊக்குவித்தால் கட்சி எப்படி முன்னேறும்?.


ஐந்து வருடங்கள் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ஹரீஷ் ராவுக்கு இதில் முக்கிய பங்கு இல்லையா? அதனால்தான் கே.சி.ஆர். அவரை இரண்டாவது முறை ஆட்சியில் ஓரங்கட்டினார். காளேஸ்வரம் விவகாரத்தில் கே.சி.ஆர். மீது கறை படிவதற்கு இரண்டு, மூன்று நபர்கள் தான் காரணம். அதில் ஹரீஷ் ராவ் ஒருவர். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் சந்தோஷ் குமார் மற்றொருவர். ஒரு தொழிலதிபரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்.


கே.சி.ஆர். மக்களின் நலனுக்காக பாடுபட்டார். ஆனால் சில தலைவர்கள் ஒப்பந்ததாரர்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து தங்களை வளப்படுத்திக் கொண்டனர். நான் உறுதியாக சொல்கிறேன். ஹரீஷ் ராவ் மற்றும் சந்தோஷ் ராவ் பின்னால் ரேவந்த் ரெட்டி இருக்கிறார். அவர் (ரேவந்த் ரெட்டி) அவர்களை பாதுகாப்பார். ஆனால் கேசிஆரை குறி வைப்பார் என்றார் கவிதா.


ஏற்கனவே தனது அண்ணன் கே.டி.ஆருடனும் மோதல் போக்கில் ஈடுபட்டிருந்தார் கவிதா என்பது நினைவிருக்கலாம். தெலங்கானாவில் நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை காங்கிரஸிடம் இழந்தது. மேலும், கவிதாவும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.