மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்

Su.tha Arivalagan
Feb 01, 2026,01:45 PM IST

டில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை) லேசான சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கின. இருந்தாலும் சிறிது நேரத்திலேயே ஏறுமுகததிற்கு திரும்பி உள்ளன.


வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், முதலீட்டாளர்கள் உடனுக்குடன் எதிர்வினையாற்ற ஏதுவாக பிஎஸ்இ (BSE) மற்றும் என்எஸ்இ (NSE) ஆகிய இரு சந்தைகளும் இன்று சிறப்பு வர்த்தகத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளன.




காலை 9:15 மணி அளவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் (Sensex) 100 புள்ளிகள் சரிந்தும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி (Nifty) 35 புள்ளிகள் சரிந்தும் காணப்பட்டன. முதலீட்டாளர்கள் பட்ஜெட் அறிவிப்புகளுக்காகக் காத்திருப்பதால் சந்தையில் ஒருவித நிதானமான போக்கு நிலவியது. ஆனால் காலை 10.20 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 0.24 சதவீதம் உயர்ந்து 82470.90 புள்ளிகளாகவும், நிப்டி 0.16 சதவீதம் உயர்ந்து 25362.1 புள்ளிகளாகவும் இருந்தன.


சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சுமார் 6% வரை குறைந்துள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. நிதியமைச்சரின் உரையில் வருமான வரிச்லுகைகள் (குறிப்பாகப் பிரிவு 87A), உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.