தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

Su.tha Arivalagan
Feb 12, 2026,11:42 AM IST

ஒட்டாவா: அமைதிக்கு பெயர் பெற்ற கனடாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஒரு கோரச் சம்பவம். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் நகரில், 18 வயது நிரம்பிய ஜெஸ்ஸி வான் ரூட்சலர் என்ற திருநங்கை நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.


தனது வீட்டில்தான் முதலில் வெறியாட்டத்தைத் தொடங்கினார் ஜெஸ்ஸி. தனது 39 வயதுத் தாய் மற்றும் 11 வயது சித்தி மகனை சுட்டுக்கொன்ற அவர், அங்கிருந்து துப்பாக்கியுடன் தான் படித்த பள்ளிக்குக் கிளம்பியுள்ளார் ஜெஸ்ஸி.


உள்ளே நுழைந்த அவர் அங்குள்ள நூலகம் மற்றும் படிக்கட்டுப் பகுதிகளில் இருந்தவர்களை இலக்கு வைத்துள்ளார். இதில் ஒரு ஆசிரியை மற்றும் 12 முதல் 13 வயதிற்குட்பட்ட ஐந்து பிஞ்சு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.




காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், ஜெஸ்ஸி வான் ரூட்சலர் பிறப்பால் ஆணாக இருந்தவர் என்பதும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணாக மாறியவர் என்பதும் தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாக மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த இவரைப் பற்றி, கடந்த காலங்களில் பலமுறை காவல்துறைக்கு புகார்கள் சென்றுள்ளன.


காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்த போது, பாதுகாப்புப் படையினரை நோக்கியும் ஜெஸ்ஸி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இறுதியாக, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு ஜெஸ்ஸி தற்கொலை செய்துகொண்டார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து கனடா பிரதமர் மார்க் கார்னி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நாடு முழுவதும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளார்.


வழக்கமாக அமெரிக்காவில்தான் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகமாக காணப்படும். ஆனால், துப்பாக்கிக் கலாச்சாரம் குறைவாகக் காணப்படும் கனடாவில், ஒரு பதின்பருவ திருநங்கை நிகழ்த்திய இந்த கொடூரம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது.