அதிசயம் ஆனால் உண்மை... நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை: விஷ்வாஸ் குமார் ரமேஷ்!
அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நடந்த விமான விபத்தில், நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்று விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று கீழே விழுந்து தீ பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 169 பயணிகள் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர் என்று தெரிய வந்துள்ளது. விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. உடனடியாக மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணிகளை செய்து வந்தனர்.
விமானம் பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உயரத்தைக் குறைத்து, மேகனினகர் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் மோதி தீப்பிடித்து எரிந்தது. விமானம் புறப்பட்ட உடனேயே, விமானி "மேடே" (Mayday) என்ற முழு அவசரகால அழைப்பை விடுத்ததாக அகமதாபாத் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், அகமதாபாத் விமான நிலையம் அருகே நடந்த இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த, 241 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். விமான விபத்தில் உயிர் பிழைத்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் அளித்த பேட்டியில், விமானம் விபத்துக்குள்ளான போது நானும் இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். ஆனால், நான் கண்களை திறந்த போது உயிருடன் இருந்தேன். எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டபோது என் இடது கையும் எரிந்தது. பின்னர் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
நேற்று பகலில், விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அனைத்தும் என் கண் முன்னே நடந்தது. நான் உயிர் பிழைத்திருக்கின்றேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. விமானம் புறப்படத் தொடங்கியபோதே பிரச்சனை ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே விமானம் கீழே விழுந்து எரியத் தொடங்கியது. விமானத்தில் இருந்து யாரும் வெளியே வர முடியவில்லை. என் அருகில் இருந்த அவசர கதவு உடைந்ததால், நான் வெளியே குதித்துத் தப்பினேன் என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒற்றை நபரான விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கிய அடுத்த நிமிடமே, அதிலிந்து வெளியே வந்த விஸ்வாஸ் குமார், தனது பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து, தனது தந்தைக்கு போன் செய்து, விமானம் விபத்துக்குள்ளானதாகவும், தான் மட்டும் உயிர் பிழைத்துவிட்டேன் என்றும் கூறியிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.