விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்..?
சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் "மாற்று சக்தி" என்ற சொல்லுக்கு நிஜமான வடிவம் கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். ஆனால் மாற்று சக்தியாக வந்ததால் எந்த மக்களால் கொண்டாடப்பட்டாரோ, அதே வேகத்தில் அவரை அந்த அந்தஸ்திலிருந்து இறக்கம் செய்தனர் நமது மக்கள்.
ஒருவேளை விஜயகாந்த் 2011-ல் அதிமுக கூட்டணிக்குச் செல்லாமல் தொடர்ந்து தனித்து நிலைகொண்டிருந்தால், தமிழ்நாட்டின் அரசியல் களம் மாறியிருக்குமா? என்ற கேள்வி இன்றளவும் அரசியல் விமர்சகர்களால் சுவாரசியமாக விவாதிக்கப்படும் ஒன்று.
இன்று விஜய் செய்ததை அன்று விஜயகாந்த்தால் செய்ய முடியாமல் போனதற்கும் கூட விஜயகாந்த்தின் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளே காரணம் என்றும் சொல்லலாம்.
2005-ல் கட்சி தொடங்கிய விஜயகாந்த், 2006 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் திராவிடக் கட்சியுடனும் இணையாமல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார். விருத்தாசலத்தில் அவர் மட்டும் வென்றாலும், தேமுதிக 8.38% வாக்குகளைப் பெற்று அதிர்வலையை உருவாக்கியது.
திமுக, அதிமுக என மாறி மாறி ஓட்டுப்போட்டு போட்டு சலித்துப் போயிருந்த மக்களுக்கு விஜயகாந்த் மிகப் பெரிய ஆபத்பாந்தவனாக காட்சி அளித்தார். தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எகிறியது. தேசிய அளவில் பேசு பொருளானார் விஜயகாந்த்.
இதை உறுதிப்படுத்துவது போல, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கியை 10.1% ஆக உயர்த்தினார் விஜயகாந்த். திமுக, அதிமுக என இரு துருவ அரசியலில் முடங்கிக் கிடந்த தமிழகத்தில், மூன்றாவது வழி சாத்தியமே என வலுவாக எடுத்துக் காட்டிய தருணம் அது.
இப்படி சீராகப் போய்க் கொண்டிருந்த விஜயகாந்த், 2011ல் பெரும் திருப்புமுனையைச் சந்தித்தார். கூட்டணியே கிடையாது, மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்று முழங்கியவர், அதிமுக பக்கம் சாய முடிவெடுத்தார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆயாசத்தையும் ஏற்படுத்தியது.
2011 சட்டமன்றத் தேர்தலில், அப்போதைய ஆளும்கட்சியான திமுகவை வீழ்த்த அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். இந்த முடிவால் அவருக்கு ஒரு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது. அதாவது தேமுதிக பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. சட்டசபையில், 29 இடங்களில் வெற்றி பெற்று, திமுகவையே பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்.
ஆனால் இந்த சிறிய லாபத்தைப் பெற்ற விஜயகாந்த், மக்கள் என்ற மிகப் பெரிய நம்பிக்கையை இழக்கத் தொடங்கினார். திமுக, அதிமுக இரண்டுமே வேண்டாம் என்று விஜயகாந்தைப் பார்த்து ஓட்டளித்த
நடுநிலை மற்றும் இளைஞர்களின் வாக்குகள், கூட்டணி என்ற முடிவால் கரையத் தொடங்கின. அடுத்து வந்த தேர்தல்களில் சினனாபின்னமாக சிதறிப் போனது தேமுதிகவின் பிம்பம். இன்று வரை அது மீள முடியவில்லை.---
விஜயகாந்த் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் எதிர்பார்த்த ஒரு வலுவான மையநீரோட்டத் தலைவராக விஜயகாந்த் நிலைபெற்றிருப்பார். 2011-ல் தனித்துப் போட்டியிட்டிருந்தால், வாக்கு சதவீதம் 15% - 18% வரை உயர்ந்திருக்கக் கூடும்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை, கூட்டணி சாயம் படியாத விஜயகாந்தால் மிக எளிதாக நிரப்பியிருக்க முடியும்.
பாமக, மதிமுக, விசிக போன்ற மாநிலக் கட்சிகள், திமுக/அதிமுக-வை விடுத்து விஜயகாந்த் தலைமையிலான கூட்டணியை நோக்கி இயல்பாக வந்திருக்கும்.
2011-ல் கிடைத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி, சட்டசபையில் ஜெயலலிதாவுடனான நேரடி மோதலுக்குப் பின் பறிபோனது. அதன் பிறகு 2014, 2016 எனத் தொடர் கூட்டணி மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத உடல்நலக் குறைவு ஆகியவை அவரது அரசியல் பயணத்தின் வேகத்தைக் குறைத்தன.
இன்று விஜய், விஜயகாந்த்தின் நோக்கத்தை வெகு எளிதாக, அழகாக நிறைவேற்றி விட்டார். விஜய்யை விட விஜயகாந்த் துணிச்சலானவர். ஆனால் சமயோசிதமாக செயல்படத் தவறியதால், அவசரப்பட்டதால் அவருக்கு கிடைத்த மக்கள் ஆதரவு அதே வேகத்தில் கரைந்து போய் விட்டது.
விஜயகாந்த் தனித்துப் போட்டியிடும் தன் முடிவை மாற்றாமல் இருந்திருந்தால், தமிழ்நாட்டின் இருதுருவ அரசியல் அன்றே உடைந்திருக்கும். அரசியலில் வேண்டுமானால் விஜயகாந்த் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், தன் நேர்மையும், அஞ்சா நெஞ்சமும், ஏழை எளிய மக்களுக்கான கொடை குணமும் கொண்ட விஜயகாந்த், தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத நாயகனாக என்றும் மக்களின் மனதில் வீற்றிருக்கிறார்!