விஜய்யின் பிரச்சார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

Su.tha Arivalagan
Jan 10, 2026,10:30 AM IST

கரூர் : விஜய்யின் பிரச்சார வாகனத்தை சென்னையில் இருந்து கரூர் சிபிஐ முகாம் அலுவலகத்திற்கு கொண்டு வந்து சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.


2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியன்று கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் தவெக கட்சியினர் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிபிஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டால் மேற்பார்வையிடப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பல கட்டமாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




சிபிஐ விசாரணையின் ஒரு பகுதியாக ஏற்கனவே தவெக நிர்வாகிகள் பலரும் டில்லிக்கு அழைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டனர். அப்போது தவெக.,வினர் தரப்பில் பல முக்கிய ஆதாரங்கள் சிபிஐ.,யிடம் சம்ர்ப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஜனவரி 12ம் தேதியன்று டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக தவெக தலைவரும் நடிகருமான விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


இந்நிலையில் விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் வாகனத்தை சென்னையில் இருந்து கரூரில் அமைக்கப்பட்டுள்ள முகாம் சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு வந்த சிபிஐ அதிகாரிகள், அதில் சோதனை நடத்தி வருகின்றனர். விஜய்யின் பிரச்சார வாகனத்தில் உள்ள சிசிடிவி கேமிரா உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் ஏற்கனவே சிபிஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.