விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

Su.tha Arivalagan
Mar 09, 2026,05:00 PM IST

சென்னை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு, மத்திய புலனாய்வு பிரிவு (CBI) அதிரடியாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் சம்பவ வழக்கு தொடர்பான விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய்யின் தவெக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகள், போலீசார் உள்ளிட்ட பலரும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக தவெக தலைவர் விஜய் விசாரணைக்கு ஆஜராக இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிபிஐ சம்மன் அனுப்பியது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விஜயிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாகத் தயாராகி வருகிறது. ஒரு புறம் கட்சி ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து விஜய் பேசி வருகிறார். மற்றொரு புறம் அக்கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த வேட்பாளர்களுக்கான நேர்காணல் நாளை (மார்ச் 10) தொடங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய் இந்த நேர்காணலைத் தலைமை தாங்கி நடத்தவிருந்தார்.இதனால் தவெக சார்பில் யாரெல்லாம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட உள்ளனர். குறிப்பாக விஜய் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.




இப்படியொரு முக்கியமான அரசியல் நகர்வை விஜய் மேற்கொள்ளவிருந்த சூழலில், சரியாக அதே நாளில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியிருப்பது தவெக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் நெருக்குதல் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை நடக்க இருந்த விஜய்யின் ஜனநாயகன் பட சென்சார் மறுஆய்வு கூட்டமும் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 


அடுத்து என்ன நடக்கும்?


நாளை காலை விஜய் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராவாரா அல்லது தனது வழக்கறிஞர்கள் மூலம் கூடுதல் கால அவகாசம் கோருவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேபோல், திட்டமிட்டபடி வேட்பாளர் நேர்காணல் நடைபெறுமா என்பதிலும் தற்போது கேள்விக்குறி எழுந்துள்ளது.

டெல்லியில் ஏற்கனவே இரண்டு முறை விசாரணை முடிந்த நிலையில், தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருப்பது இந்த வழக்கில் ஏதேனும் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளதா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


தமிழக அரசியலில் தடம் பதிக்கத் துடிக்கும் விஜய்க்கு, இந்த சிபிஐ விசாரணை ஒரு சவாலாக அமையுமா அல்லது இது அவரது அரசியல் பயணத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.