கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!

Su.tha Arivalagan
Jan 19, 2026,06:45 PM IST

சென்னை : டெல்லியில் தவெக தலைவர் விஜய்யிடம் நடந்த சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்ததைத்  தொடர்ந்து விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கிட்டத்தட்ட ஐந்தேகால் மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த விஜய், புன்னகையுடன் செய்தியாளர்களைப் பார்த்து கையசைத்து விட்டுச் சென்றார்.


செப்டம்பர் 27ம் தேதியன்று கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணை நடத்தி வருகிறது. இந்த "கரூர் துயரம்" தொடர்பான வழக்கில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ஏறக்குறைய சிபிஐ விசாரணையை முடித்து விட்டது. தற்போது தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.



சிபிஐ அனுப்பிய சம்மன் தொடர்பாக ஜனவரி 12ம் தேதி டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரான நிலையில், இன்று இரண்டாவது முறையாக அவர் ஆஜரானார்.  இந்த விசாரணையை முடித்துக் கொண்ட பின்னர், சிபிஐ தனது விரிவான குற்றப்பத்திரிகையை வரும் பிப்ரவரி மாதம் மத்தியில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.




விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில், நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பேசப்பட்டு வரும் சூழலில், இந்தச் சட்ட ரீதியான நடவடிக்கை அவருக்கு ஒரு சவாலாக அமையலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், இது அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கையா அல்லது வழக்கின் நியாயமான நகர்வா என்பது சிபிஐ அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடும்போது தான் தெரியவரும்.


இன்று நடந்த விசாரணை குறுக்கு விசாரணையாக நடப்பதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த முறை விஜய் அளித்த வாக்குமூலத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக விஜய் தாமதமாக வந்ததுற்கு என்ன காரணம், கூட்ட நெரிசலை முன்கூட்டியே ஏன் தவெக தலைவர்கள் உணரவில்லை என்பது உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் உறுதியாக எதுவும் வெளியாகவில்லை.


இந்த நிலையில் ஐந்தே கால் மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின்னர் விஜய் அங்கிருந்து வெளியே வந்தார். வெளியே வந்தவர் நுழைவாயிலில் பெரும் திரளாக செய்தியாளர்களும், தவெக தொண்டர்களும் காத்திருந்ததைப் பார்த்து காரை விட்டு இறங்கி அவர்களைப் பார்த்து கையைத்தார். புன்னகையுடன் அவரது முகம் காணப்பட்டது. கடந்த முறை அவர் இதுபோல செய்யவில்லை. இந்த முறை புன்னகையுடன் காரிலிருந்து இறங்கி கையசைத்து விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.