சென்சார் சான்றிதழ் வழங்கும் அவகாசம் 18 நாட்களாகக் குறைப்பு.. அமைச்சர் எல். முருகன்
Feb 05, 2026,10:22 AM IST
டெல்லி: திரைப்படங்களுக்கான தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசம் 18 நாட்களாகக் குறைந்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
வழக்கமாக முழுநீளத் திரைப்படங்களுக்குச் சான்றிதழ் வழங்க 48 வேலை நாட்கள் வரை ஆகும். ஆனால், தற்போது ஆன்லைன் முறையினால் இது சராசரியாக 18 வேலை நாட்களாகக் குறைந்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மக்களவையில் தெரிவித்துள்ளார். குறும்படங்களுக்குச் சான்றிதழ் வழங்க வெறும் 3 வேலை நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் 1952-ஆம் ஆண்டு சினிமா சட்டத்தின்படியும், 2024-ஆம் ஆண்டு சினிமா (சான்றிதழ்) விதிகளின்படியும் செயல்படுகிறது. கடந்த 2020-21 முதல் 2024-25 வரையிலான நிதியாண்டுகளில், சென்சார் வாரியம், மொத்தம் 71,963 திரைப்படங்களுக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளது. 2021-இல் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்ட பிறகு, தணிக்கை வாரியத்தின் முடிவுகளை எதிர்த்து சீராய்வுக் குழு அல்லது உயர்நீதிமன்றங்களை அணுகும் வசதி உள்ளது.
அதேபோல, திரைப்படங்களில் வெட்டுக்கள் அல்லது மாற்றங்கள் எப்போது பரிந்துரைக்கப்படும் என்பது குறித்தும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது:
இதுதொடர்பாக அமைச்சர் முருகன் கூறுகையில், இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு அல்லது குற்றச் செயல்களைத் தூண்டுதல் போன்ற சட்டப்பூர்வ விதிகளுக்கு எதிராகக் காட்சிகள் இருந்தால் மட்டுமே மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். அரசின் நோக்கம் படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாப்பதோடு, தணிக்கை நடைமுறையை வெளிப்படையானதாகவும், பொறுப்புமிக்கதாகவும் மாற்றுவதே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.