2026ல் தொடங்குகிறது சென்சஸ் கணக்கெடுப்பு.. முதலில் லடாக், காஷ்மீரில் தொடங்கும்.. மத்திய அரசு

Su.tha Arivalagan
Jun 16, 2025,06:22 PM IST

டில்லி : இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் 2026 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 


2021 ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீண்ட தாமதத்திற்குப் பின்னர் அடுத்த ஆண்டு சென்சஸ் எடுக்கப்படவுள்ளது.


இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேற்கண்ட இரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். 


இந்த கணக்கெடுப்பு, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில், வீடுகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும், இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை குறித்த விரிவான தகவல்கள் திரட்டப்படும்.




மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948 இன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகை, சமூக-பொருளாதார நிலை மற்றும் பிற முக்கிய தகவல்களைப் புரிந்துகொள்வதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு முக்கிய கருவியாகும். இது அரசு கொள்கைகளை வகுப்பதற்கும், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கும் உதவுகிறது.


முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு, இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் சமூகப் புள்ளிவிவரங்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தரவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது சாதி வாரி விவரங்களும் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.