சர்வதேச செய்தி நிறுவனங்கள் உள்பட.. 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: சர்வதேச செய்தி நிறுவனங்கள் உள்பட இந்தியாவில் செயல்பட்டு வரும் 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க எக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு எக்ஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், கணக்குகளை முடக்காவிட்டால் எக்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை பாயும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டின் சட்ட விதிகளை மீறியதாகக் கூறி 8,000க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை X நிறுவனம் ஏற்றுக்கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தத் தகவலை X நிறுவனம் வியாழக்கிழமை இரவு வெளியிட்டது. இதில் சர்வதேச செய்தி நிறுவனங்கள் மற்றும் பல முக்கிய X பயனர்களின் கணக்குகளும் அடங்கும். அபராதம் மற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கு சிறை தண்டனை போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக X தெரிவித்துள்ளது.
அதேசமயம், மத்திய அரசின் இந்த உத்தரவு நியாயமற்றது என்று எக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இது பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எந்தெந்த பதிவுகள் இந்தியாவின் சட்டங்களை மீறுகின்றன என்பதை இந்திய அரசு குறிப்பிடவில்லை. பல கணக்குகளை முடக்க எந்த ஆதாரமும் அல்லது காரணமும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று எக்ஸ் கூறியுள்ளது.
கணக்குகளை முடக்குவது கடினமான முடிவுதான். ஆனால் இந்தியாவில் எக்ஸ் தளம் தொடர்ந்து இயங்குவது முக்கியம். அப்போதுதான் மக்கள் தகவல்களைப் பெற முடியும் என்று நம்புகிறோம் என்றும் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சட்டப்படி என்னென்ன வழிகளில் இதை அணுக முடியுமோ அதை எல்லாம் எக்ஸ் ஆராய்ந்து வருகிறது. ஆனால் இந்திய சட்டங்கள் எக்ஸ் நிறுவனத்தின் கைகளை கட்டிப்போட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயனர்கள் நீதிமன்றத்தை அணுகி நேரடியாக உதவி பெற எக்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.