டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Su.tha Arivalagan
Jun 13, 2026,03:53 PM IST

டில்லி: நாடு முழுவதும் எரிபொருள் பயன்பாட்டை முறைப்படுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் மத்திய அரசு ஒரு முக்கிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கான சில்லறை பெட்ரோல் பங்குகளில் இனி ஒரு வாடிக்கையாளருக்கு, ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


பொதுவாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் தங்களின் தினசரி பயன்பாட்டிற்காக சில்லறை விற்பனை நிலையங்களில் (Retail Outlets) இருந்து பேரல்களில் அதிகளவில் டீசல் வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. இனி இதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்ற ஒட்டுமொத்தமாக (Bulk Consumers) அதிகளவில் எரிபொருள் வாங்குவோர், சில்லறை பெட்ரோல் பங்குகளில் இருந்து பெட்ரோல் அல்லது டீசல் வாங்கக் கூடாது என மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.


அதிகளவில் எரிபொருள் தேவைப்படும் இந்த மொத்த நுகர்வோர்கள், மத்திய அரசால் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த விற்பனை பங்குகள் (Authorized Bulk Outlets) அல்லது டீலர்கள் மூலமாக மட்டுமே தங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு தனது புதிய கட்டுப்பாட்டில் வலியுறுத்தியுள்ளது.




ஏன் இந்தக் கட்டுப்பாடு?


சமீப காலமாக சில்லறை விற்பனை நிலையங்களுக்கும், மொத்த விற்பனை நிலையங்களுக்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் காரணமாக, பல வணிக நிறுவனங்கள் சில்லறை பங்குகளில் இருந்து பெருமளவில் எரிபொருளை வாங்கிச் சேமிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் சாதாரண சாமானிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும், அன்றாட வாகன ஓட்டிகளுக்கும் சில்லறை பங்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இதனைத் தவிர்த்து, விநியோகத்தை முறைப்படுத்தவே மத்திய அரசு இந்த 200 லிட்டர் வரம்பைக் கொண்டு வந்துள்ளது.


இந்த உத்தரவின் மூலம் லாரிகள், பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்கள் வைத்திருக்கும் சாதாரண மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஏனெனில், அவர்களின் தினசரித் தேவை 200 லிட்டருக்குள் அடங்கிவிடும். ஆனால், ஜேசிபி (JCB) போன்ற கனரக வாகனங்கள், வணிக ரீதியிலான பெரிய உள்கட்டமைப்பு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இனி சில்லறை பங்குகளில் நேரடியாக பேரல்களில் டீசல் நிரப்ப முடியாது. அவர்கள் மொத்த விற்பனை பிரிவை மட்டுமே நாட வேண்டும்.


இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதால், நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறும் பங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.