சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

Su.tha Arivalagan
Mar 10, 2026,10:24 AM IST

டெல்லி:  மத்திய கிழக்கில் இன்னும் பதட்டம் தணியவில்லை. ஈரானை மிக மூர்க்கமாக தாக்கப் போவதாக அமெரிக்கா கூறி வருகிறது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் தட்டுப்பாடு விரைவில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மக்கள் இதனால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க மத்திய அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாட்டில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகியவற்றை, தற்காலிகமாக சமையல் எரிவாயு உற்பத்திக்காக முழுமையாகப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.




உற்பத்தியாகும் கூடுதல் எரிவாயுவை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.


ஏன் இந்த முன்னெச்சரிக்கை?


இந்தியா தனது சமையல் எரிவாயு தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. இதில் பெரும் பகுதி மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகிறது. தற்போது அங்கே போர்ச் சூழல் நிலவுவதால், விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டால் இந்தியாவில் தட்டுப்பாடு வரக்கூடும். அதனை முன்கூட்டியே தடுக்கவே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.


மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்க, அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்து தற்போது எரிவாயு வரத் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரித்துள்ளது.