ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்.. டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

Su.tha Arivalagan
May 08, 2025,01:44 PM IST

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சிகளுக்கு மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய படைகள், பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தின. அதில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மறுபக்கம் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.


இந்த நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நடத்திய தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் இன்று கூட்டப்பட்டது. இதில், ராணுவ நடவடிக்கையின் நோக்கம், குறிவைக்கப்பட்ட இலக்குகள், பாதுகாப்பு மற்றும் மூலோபாய ரீதியிலான தாக்கம் குறித்து தலைவர்களுக்கு விளக்கப்பட்டது. 




இந்தக் கூட்டத்தில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, டி.ஆர்.பாலு உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள், பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தனர்.


முன்னதாக, 25 நிமிடங்களுக்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியப் படையினர் நடத்திய தாக்குதல் பல முக்கிய தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் குடும்பமும் இதில் தப்பவில்லை. இந்திய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தனது குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்டதாக மசூத் அஸார் கூறியுள்ளார்.


ஜம்மு காஷ்மீரின் பாஹல்காம் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.