பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை.. உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல 7 எம்பி.,க்கள் அடங்கிய குழு!

Su.tha Arivalagan
May 17, 2025,05:13 PM IST

டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்து அமைதியான வழியில் இந்தியா பல்வேறு அதிரடிகளைத் தொடர்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு அழுத்தமான அடியைக் கொடுத்துள்ள நிலையில், அடுத்து உலக நாடுகளிடம் இதுகுறித்து விளக்கிச் சொல்ல குழு ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதில் விசேஷம் என்னவென்றால் முக்கியமான எதிர்க்கட்சிகளை இந்தக் குழுவில் இணைத்து தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கிறது என்பதை வெளிக்காட்டியுள்ளது மத்திய அரசு.


பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுக்க தயாராகிவிட்டது. காஷ்மீரின் Pahalgam பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் Operation Sindoor நடவடிக்கைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை உலகிற்கு சொல்ல இந்தியா திட்டமிட்டுள்ளது.




இதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுக்களை இந்தியா அனுப்ப உள்ளது. இந்த குழுக்கள் இந்தியாவின் முக்கியமான நட்பு நாடுகளுக்கும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UN Security Council) உறுப்பு நாடுகளுக்கும் சென்று இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க உள்ளனர். இந்த பயணங்கள் மே 22-ம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது.


இந்த குழுக்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒருமித்த கருத்தையும், உறுதியான அணுகுமுறையையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும். "பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற இந்தியாவின் வலுவான செய்தியை அவர்கள் உலகிற்கு கொண்டு செல்வார்கள்" என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்த குழுக்களுக்கு தலைமை தாங்கும் தலைவர்களை மத்திய அரசு கவனமாக தேர்ந்தெடுத்துள்ளது. அவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணியான இந்தியா கூட்டணியிலிருந்து 3 பேருக்கு குழுவைத் தலைமை தாங்கும் பொறுப்பைக் கொடுத்துள்ளது மத்திய அரசு. ஆளுங்கட்சியான NDA கூட்டணியில் இருந்து நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட ஆளுங்கட்சிக்கு சரிக்குச் சமமாக எதிர்க்கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் தந்துள்ளது மத்திய அரசு.


ஏழு குழுக்களை வழி நடத்தப் போகும் தலைவர்கள் விவரம்:


- சசி தரூர் (இந்திய தேசிய காங்கிரஸ்)

- கனிமொழி கருணாநிதி (திராவிட முன்னேற்ற கழகம்)

- சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் கட்சி)

- ரவி சங்கர் பிரசாத் (பாரதிய ஜனதா கட்சி)

- பைஜயந்த் பாண்டா (பாரதிய ஜனதா கட்சி)

- சஞ்சய் குமார் ஜா (ஐக்கிய ஜனதா தளம்)

- ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா)


இவர்கள் தலைமையிலான குழுக்கள் விரைவில் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கும் என்று தெரிகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய நாடுகளுக்கு கனிமொழி தலைமையிலான குழு பயணிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், "மிக முக்கியமான தருணங்களில், இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது. அனைத்துக் கட்சிக் குழுக்கள் விரைவில் முக்கிய நட்பு நாடுகளுக்குச் சென்று, பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாத நமது பொதுவான செய்தியை எடுத்துச் செல்லும். இது அரசியலுக்கு அப்பாற்பட்டு, வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாகும்." என்று கூறினார்.ீ