டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு
புது தில்லி: முதல்வர் ரேகா குப்தா மீது புதன்கிழமை நடந்த தாக்குதலை அடுத்து, அவரது பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
டெல்லியில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டபோது குஜராத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் திடீரென தலைமுடியைப் பிடித்து இழுத்தும், கன்னத்தில் அறைந்தும் தாக்குதல் நடத்தினார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜ்கோட்டைச் சேர்ந்த 41 வயது நபர் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் ரேகா குப்தாவின் பாதுகாப்பை மேம்படுத்த, மேம்பட்ட பாதுகாப்பு தொடர்பு (ASL) நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு யோசித்து வருவதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, டெல்லி காவல்துறையின் பாதுகாப்பு பிரிவின் கீழ் Z- பிரிவு பாதுகாப்பு அவருக்கு உள்ளது. பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளும்போது கூடுதல் கமாண்டோக்களை நியமிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்த தாக்குதல் குறித்து முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், என் மீது நடத்தப்பட்ட தாக்குதல், என் மீதான தாக்குதல் மட்டுமல்ல. இது டெல்லி மக்களுக்கு சேவை செய்வதையும், அவர்களின் நலனுக்காக உழைப்பதையும் தடுக்கும் கோழைத்தனமான முயற்சி. இந்த தாக்குதல் தனக்கு அதிர்ச்சி அளித்தாலும், தான் நலமாக இருக்கிறேன். இத்தகைய தாக்குதல்கள் என் மன உறுதியையோ அல்லது மக்களுக்கு சேவை செய்யும் என் எண்ணத்தையோ ஒருபோதும் உடைக்க முடியாது. இப்போது, நான் முன்பு இருந்ததை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களுடன் இருப்பேன். மக்களின் குறைகளைத் தீர்க்கும் முகாம்கள் முன்பு போலவே தீவிரமாகவும், அர்ப்பணிப்புடனும் தொடரும். உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் தான் என் மிகப்பெரிய பலம் என்று கூறியுள்ளார்.