செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Meenakshi
Sep 20, 2025,07:01 PM IST

திருவள்ளூர்: செம்பரம்பாக்கத்தில் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை துவக்கி வைக்க பூந்தமல்லி சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின், குமணன்சாவடி முதல் திருமழிசை வரை சுமார் 8 கிலோ மீட்டருக்கு திமுக சார்பில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் செம்பரம்பாக்கத்தில் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.




அதன்பின்னர் 530 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கும் திறன்கொண்ட அந்த நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் புகார் செய்யும் வகையிலான குடிநீர் மொபைல் செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் மூலம் உதவி புவியியலாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.


இந்த திட்டத்தின் வாயிலாக மடிப்பாக்கம், வளசரவாக்கம், உத்தண்டி, துரைப்பாக்கம், புழல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16.40 லட்சம் பேர் பயன்பெற உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சா.மு.நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.