பொத்துக்கிட்டு ஊத்துதுங்க மழை.. காலையிலிருந்து சென்னையிலும், புறநகர்களிலும்!
- கலைவாணி கோபால்
சென்னை: சென்னையிலும் புறநகர்ப் பகுதிகலிலும் காலை முதல் லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் டிட்வா புயல் எபக்ட் தொடர்கிறது.
இலங்கையைப் புரட்டிப் போட்டு, அதன் வாழ்வதாரத்தை நொறுக்கி எடுத்துள்ள டிட்வா புயல் தமிழ்நாடு கரைக்கு நெருங்கி வந்தபோது வீரியம் குறைந்து போய் விட்டது. தற்போது அது புயல் என்ற நிலையிலிருந்து வலுவிழந்து விட்டது.
நேற்று இரவு முதல் தமிழ்நாட்டில் உள்ள சென்னை போன்ற பகுதிகளில் தன் சக்தியை காட்டும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது டிட்வா புயல் வலுவிழந்து காணப்படுவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் முன்னாள் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.
இது இன்று மாலைக்கு மேல் 30 கிலோ மீட்டர் என்ற அளவில் நெருங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலுவிழந்த போதிலும் கூட, அதன் தாக்கத்தால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மற்றும் கன மழை பெய்து கொண்டே இருக்கிறது.
சென்னையில் நேற்று புயலின் தாக்கம் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பெரிதாக மழை இல்லை. காற்று கூட பெரிதாக இல்லை. ஆனால், இன்று யாரும் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்து வருகிறது. காலையிலிருந்தே மழை பெய்து வருவதால் அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரி செல்வோர் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான முதல் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையமும் தகவல் தெரிவித்துள்ளது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)