1975ல் பரவிய பயங்கர தீ.. நேற்று எரிந்த பெயர்ப் பலகை.. 2 முறை தப்பிய சென்னை எல்ஐசி!
Apr 03, 2023,09:57 AM IST
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள 15 மாடி எல்ஐசி அலுவலகத்தில் தீவிபத்து நடந்திருப்பது புதிதல்ல. 1975ம் ஆண்டு மிகப் பெரிய தீவிபத்தை எல்ஐசி கட்டடம் சந்தித்தது. அந்த விபத்தோடு ஒப்பிட்டால் நேற்று நடந்தது சிறிய அளவிலான விபத்துதான்.
1975ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி இரவு 8 மணி இருக்கும். எல்ஐசி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் தீப்பிடித்துக் கொண்டது. அப்போது கடற்காற்று பலமாக வீசிக் கொண்டிருந்ததால் தீ மளமளவென்று நாலாபக்கமும் பரவத் தொடங்கியது. முதல் மாடிக்கு தீபரவி அப்படியே அடுத்தடுத்து 5 மாடிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.
அக்னியின் கைகளில் சிக்குண்ட எல்ஐசி கட்டடத்தைக் காப்பாற்ற சென்னை மாநகரில் இருந்த அத்தனை தீயணைப்பு வண்டிகளும் வரவழைக்கப்பட்டன. தண்ணீர் பற்றாத காரணத்தால் கூவத்திலிருந்து தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்தன. தீவிபத்தில் சிக்கி கண்ணாடி ஜன்னல்கள் கதவுகள் உடைந்து சிதறி மேலிருந்து விழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் பெரும் சிரமப்பட்டனர். கடும் போராட்டத்திற்கு இடையே தீயணைக்கும் பணிகள் தொடர்ந்தன. அடுத்த நாள் மாலை 6 மணிக்குத்தான் முழுமையாக தீ அணைக்கப்பட்டது. இந்த பெரும் தீவிபத்தில் சிக்கி எல்ஐசி கட்டடத்தின் 5 மாடிகளும் கடும் சேதமடைந்தன. அத்தனை பொருட்களும் எரிந்து சாம்பலாகி விட்டன.
இதுதான் எல்ஐசியில் நடந்த மிகப் பெரிய தீவிபத்து. 1959ம் ஆண்டு எல்ஐசி கட்டடம் கட்டப்பட்டது. அப்போது இதுதான் இந்தியாவிலேயே மிகவும் உயரமான கட்டடம் என்ற பெயரைப் பெற்றது.
2012ம் ஆண்டு இன்னொரு அசம்பாவிதத்தை எல்ஐசி கட்டடம் சந்தித்தது. 11வது மாடியில் பெரும் விரிசல் ஏற்பட்டதால் மொத்த கட்டடமும் பீதிக்குள்ளாகியது. மெட்ரோ சுரங்கப் பணிகள் காரணமாகஇந்த விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.