மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேணும்.. பசங்களைப் பார்த்துக்கணும்.. ஆர்த்தி ரவி அதிரடி டிமாண்ட்!

Manjula Devi
May 21, 2025,06:52 PM IST

சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என ரவியும்,அதேபோல்  தனக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தியும் மனு அளித்துள்ளனர். 


கூடவே தனது இரு மகன்களின் பராமரிப்பையும் ரவி மோகனே ஏற்க வேண்டும் என்றும் ஆர்த்தி ரவி கோரிக்கை வைத்துள்ளார். இருதரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதி ஆர்த்தி மனுவிற்கு, ரவி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 12க்கு ஒத்திவைக்கப்பட்டது.


கடந்த 2009 ஆம் ஆண்டு  ரவி மோகனும் ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 15 வருட திருமண வாழ்க்கையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 




இந்த நிலையில் ரவி மோகன் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 


இதற்கிடையே ரவி மோகனும் ஆர்த்தியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் ரசிகர்கள்  யார் பக்கம் நியாயம் உள்ளது என்பது தொடர்பான  விவாதங்களும் நடைபெற்றன. 


இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு இன்று மீண்டும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜனாகினர். அப்போது ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என நடிகர் ரவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் தனக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும். இரு மைனர் குழந்தைகளையும் ரவி மோகனே பராமரிக்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி ஆர்த்தி மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை  ஜூன் 12க்குள் ஒத்திவைத்தார்.


முன்னதாக ரவி மோகன்-ஆர்த்தி பிரிவுக்கு காரணம் கெனிஷா தான் என கூறிவந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்தார் நடிகர் ரவி. ஆனால் சமீபத்தில் இனி கெனிஷா தான் தனது வாழ்வின் ஒளி என ரவி அறிக்கை வெளியிட, பதிலுக்கு எனது கணவர் பிரிவதற்கு காரணம் மூன்றாவது நபரே என ஆர்த்தியும் அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.