சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
சென்னை: தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 85 சதவீதத்திற்கும் மேலான வாக்குப் பதிவு நடந்துள்ள போதிலும் பல்வேறு விசித்திரங்களையும் காண முடிகிறது. குறிப்பாக சென்னை தொகுதிகளில் பதிவான வாக்குகள் குறித்து பல சுவாரஸ்யங்களைக் காணலாம்.
பொதுவாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால், வாக்களித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதே வழக்கம். ஆனால், சென்னையில் இந்த முறை ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சென்னை மாவட்டம் 83.7% என்ற இமாலய வாக்குப்பதிவை எட்டியுள்ளது. இது கடந்த காலங்களில் இருந்த 60% மற்றும் 61.2% ஆகிய அளவுகளை விட மிக அதிகம்.
இந்தச் சதவீத உயர்வு ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது ஆச்சரியம் காத்திருக்கிறது. ஆம், வாக்களித்த வாக்காளர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளதுதான் இந்த விசித்திரமாகும்.
கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் மொத்தமாக 24.33 லட்சம் பேர் வாக்களித்தனர். இதுவே 2021 சட்டசபைத் தேர்தலில் 24.16 லட்சமாக இருந்தது. ஆனால் இந்த முறை அது வெகுவாக சரிந்துள்ளது. இம்முறை 23.69 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைதான் இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. போலி வாக்காளர்கள் நீக்கம் மற்றும் பட்டியலில் செய்யப்பட்ட தூய்மைப்படுத்தும் பணிகளால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 28.30 லட்சமாகக் குறைந்துள்ளது. இப்படி குறைக்கப்பட்ட வாக்காளர்களில் 23.69 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
இதை வைத்துப் பார்க்கும்போது சென்னையில் வாக்களிப்பு சதவீதம் காகித அளவில் உயர்ந்து காணப்பட்டாலும் கூட, வழக்கமான அளவை விட குறைந்த அளவிலேயே வாக்காளர்கள் வாக்களிக்க வந்துள்ளனர் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.