சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Su.tha Arivalagan
Jul 03, 2026,01:28 PM IST

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏ.,வுமான சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 03, 2026) தமிழக டிஜிபி-க்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


வழக்கின் பின்னணி:

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சி.வி.சண்முகம், தனக்கு அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.


நீதிமன்றத்தின் முக்கியக் கருத்து:




இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரரின் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டார். அப்போது நீதிபதி குறிப்பிட்டதாவது, "முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனக்கு பாதுகாப்பு தர வேண்டியதன் அவசியத்தை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்." என உத்தரவிட்டுள்ளார்.


டிஜிபி-க்கு நீதிமன்றம் ஆணை:

சி.வி.சண்முகம் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி இளந்திரையன், அவருக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு (Armed Security) வழங்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) அதிரடியாக ஆணையிட்டார். அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பாக இயங்கி வரும் சி.வி.சண்முகத்திற்கு நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.