சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ராயப்புரத்தில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக கடந்த 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்துடன் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் 12 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். தனியார் நிறுவன பணியில் பணி பாதுகாப்பு மற்றும் பல்வேறு சலுகைகளை இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறுகையில்,
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அருகில் மருத்துவமனை உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடுவோரை அப்புறப்படுத்த சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் உங்கள் கோரிக்கைக்கு எதிராகவோ அல்லது போராட்டத்திற்கு எதிராகவோ இல்லை. போராட உரிமை இருந்தாலும் சாலை அல்லது நடைபாதையை ஆக்கிரமித்து போராட அனுமதிக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் அமைதியாக போராட்டம் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசோ தூய்மை பணியாளர்களை அகற்ற போலீசாரை பயன்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லையெனவும் தூய்மை பணியாளர்களே கலைந்து செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பதாக தமிழக அரசு சார்பாக நீதிம்ன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.