தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அனேக இடங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது . அதன்படி நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் வெயில் சதத்தை தாண்டி பதிவானது. குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் வெயில் இயல்பை ஒட்டியே இருந்தது.
இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 21ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நாளை (16.4.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 17 முதல் 21 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு வெயில்:
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்ப நிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. ஏப்ரல் 15 முதல் 19ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.