கோடை கால பருவ மழை... இயல்பைவிட 129% அதிகம்... சென்னை வானிலை மையம் தகவல்!

Meenakshi
May 31, 2025,05:58 PM IST

சென்னை: சென்னையில் இயல்பை விட 129% அளவுக்கு கோடை கால பருவ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் தனது உக்கிரத்தை காட்டி வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திர நாட்களில் வெளியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்று சொல்லலாம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அக்னி நட்சத்திர நாட்களில் பருவ மழை தொடங்கி விட்டது. இந்த மழை தொடங்கியது மட்டும் இன்றி, தமிழகம் முழுவதிலும் பரவலாக அதிக மழை பொழிந்து சில முக்கிய நகரங்களை குளு குளு என மாற்றிவிட்டது. இந்த மழை நேற்று வரையிலும் பெய்து வருகிறது.


இந்த மழை தமிழகத்தில் மட்டுமின்றி அண்டைய மாநிலமான கேரளாவிலும் பருவமழை அதிகமாக பெய்துள்ளது.  தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நேற்று மட்டும் கேரள மாநிலத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆலப்புழா, கோட்டயம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் பாதிப்பு அதிகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அம்மாநிலத்தில் ஏற்படும் பேரிடர் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த தொடர் மழை காரணமாக சென்னையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மே மாதத்தில் நல்ல மழை பொழிந்துள்ளது எனலாம். இந்தாண்டு சென்னையில் கோடைக்கால பருவமழை இயல்பை விட 129 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் 48.8மி.மீ மழைப் பதிவான நிலையில், நடப்பாண்டில் 111.7 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.