சென்னை மழை முன்னெச்சரிக்கை பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

Su.tha Arivalagan
Aug 26, 2026,04:18 PM IST

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் வெள்ள பாதிப்புகளைத் தவிா்க்கவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அதிவேகத்தில் மேற்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் பருவமழை நிவாரணப் பணிகளை உடனுக்குடன் கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் 'பொறுப்பு அமைச்சர்கள்' நியமிக்கப்பட்டுள்ளனர்.


இத்தகவலைத் தலைமைச் செயலாளர் சாய்குமார் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மேலும், சென்னை மாநகராட்சியின் அனைத்து 15 மண்டலங்களின் பணிகளையும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமை ஏற்று ஒருங்கிணைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் பட்டியல்:




திருவொற்றியூர் மற்றும் மணலி (மண்டலங்கள் 1 & 2): பொறுப்பு அமைச்சர்: ரமேஷ்

மாதவரம் மற்றும் தண்டையார்பேட்டை (மண்டலங்கள் 3 & 4): பொறுப்பு அமைச்சர்: லோகேஷ் தமிழ்ச்செல்வன்

ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் (மண்டலங்கள் 5 & 6): பொறுப்பு அமைச்சர்: அருண்ராஜ்

அம்பத்தூர், அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டை (மண்டலங்கள் 7, 8 & 9): பொறுப்பு அமைச்சர்: விஜய் பாலாஜி

கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் (மண்டலங்கள் 10 & 11): பொறுப்பு அமைச்சர்: டி.கே.பிரபு

ஆலந்தூர் மற்றும் அடையாறு (மண்டலங்கள் 12 & 13): பொறுப்பு அமைச்சர்: விஜய் தமிழன் பார்த்திபன்

பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் (மண்டலங்கள் 14 & 15): பொறுப்பு அமைச்சர்: க.விக்னேஷ்


முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் நடவடிக்கைகள்:

பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற சக்திவாய்ந்த ராட்சத பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் தங்கும் மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக வழங்க உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து அமைச்சர்கள் களத்தில் நின்று பணிகளை மேற்கொள்வார்கள்.


அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு பொறுப்பு அமைச்சரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் நாள்தோறும் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப் பணிகள், கால்வாய் வடிகால் தூர்வாரும் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவார்கள். அவசரக் காலங்களில் உடனடி நடவடிக்கை எடுக்க ஏதுவாக 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


சென்னையில் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் எந்தவித பாதிப்பிற்கும் ஆளாகாத வகையில், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.