சென்னைஒன் செயலி தொழில்நுட்பக் கோளாறு சரியானது.. எம்டிசி நிறுவனம் அறிவிப்பு
சென்னை: சென்னைஒன் செயலியில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோாளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் வழக்கம் போல செயலியைப் பயன்படுத்தலாம் என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், தற்போது மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்பதையும், 'சென்னை ஒன்' (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்திற்கு வருந்துவதுடன், தொழில்நுட்பக் குழுவினர் இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயணிகளின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்தப் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதால் பயணிகள் வழக்கம் போல செயலியைப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.