பெருவெள்ளமா.. நீங்க வாங்க சந்திக்க நாங்க ரெடி.. கெத்தாக காத்திருக்கும் பள்ளிக்கரணை!

Su.tha Arivalagan
Nov 18, 2025,01:07 PM IST

- கலைவாணி கோபால்


சென்னை:  பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னை மாநகராட்சி எல்லைக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளது. இது தெற்கு சென்னையின் வெள்ளத்தைத் தடுக்கும் ஒரு முக்கியமான ஈரநிலம் (Wetland) ஆகும்.


சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 50 சதுர கிலோமீட்டருக்கும் (5000 ஹெக்டேர்) அதிகமாக இருந்ததாகக் கூறப்படும் இந்தச் சதுப்பு நிலத்தின் தற்போதைய அதிகாரப்பூர்வப் பரப்பளவு சுமார் 1247.54 ஹெக்டேர் (ஏப்ரல் 2022 நிலவரப்படி). இதில் சுமார் 698 ஹெக்டேர் வனத்துறையின் கீழ் காப்புக் காடாக உள்ளது.


இது உலகளாவிய சூழலியல் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ், ஏப்ரல் 8, 2022 அன்று ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும்.


இந்தச் சதுப்பு நிலம் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் வலசைப் பறவைகள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களுக்கு ஒரு முக்கியமான வாழ்விடமாகத் திகழ்கிறது.




பள்ளிக்கரணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பருவமழையால் பெரிதும் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கனமழையின்போது, குறிப்பாக 2020-ல் நிவர் புயலின் போதும், அதனைத் தொடர்ந்த கனமழையின் போதும் (2023-ல் மிக்ஜாம் புயலின் போதும்) நாராயணபுரம் ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடிகால் அமைப்புகளின் வழியாகத் தண்ணீர் வெளியேற முடியாமல், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.


இதன் காரணமாக, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுதல், போக்குவரத்துப் பாதிப்பு, இயல்பு வாழ்க்கை முடக்கம் போன்ற பல பாதிப்புகளை மக்கள் சந்தித்துள்ளனர்.


தற்போது, கனமழையை முன்னிட்டு, வெள்ளத்தைத் தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நாராயணபுரம் ஏரி மற்றும் பெரும்புக்கம் ஏரி போன்ற நீர்நிலைகளில் இருந்து அதன் கொள்ளளவுக்கு மேல் தேங்கும் நீர், தேவைக்கு ஏற்ப மதகுகள் வழியாக (ஒக்கியம் மடுவு) பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மூலம் கடலுக்குள் திறந்துவிடப்படுகிறது.


இந்த நடவடிக்கை, வெள்ள நீர் வீடுகளில் புகுவதைத் தடுக்கும் மிக முக்கியமான வடிகால் செயலாகச் செயல்படுகிறது. நடப்பு மழைக்காலத்தில் பெரும் மழை பெய்தாலும் கூட சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


(சென்னையைச் சேர்ந்த கலைவாணி கோபால், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)