குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
சென்னை: முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவருக்கும் சென்னை காவல் துறை விசாரணைக்கு ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியுள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் குதிரை பேரம் பேச முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைத் தொடர்பு கொண்டு, கட்சி மாறுவதற்காகவோ அல்லது அரசியல் ரீதியான ஆதரவைத் திரட்டுவதற்காகவோ கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சென்னை காவல் துறையில் முறையான புகார் அளிக்கப்பட்டது. தவெக அரசை கவிழ்க்க அந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் சிலரை விலைக்கு வாங்குவதற்காக குதிரை பேரம் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குதிரை பேரம் நடந்ததும், தவெக எம்எல்ஏ.,க்கள் சிலரிடம் பேசப்பட்டதும், ரூ.180 கோடி வரை இதற்காக செலவிட பேசப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மூலமாக தான் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சென்னை காவல் துறையினர், முதற்கட்டமாக இந்த பேரம் பேசுதல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் கரூர் அசோக் குமார் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதி, விசாரணைக்கு ஆஜராவதற்காக அவர்களுக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை காவல் துறையின் தனிப்படையினர் கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்குச் சென்று இந்த சம்மனை நேரில் வழங்கியுள்ளனர். வீட்டில் அவர்கள் இல்லாததால், விதிமுறைகளின்படி சம்மன் நகல் அவர்களது வீட்டின் சுவரில் ஒட்டப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தற்போதைய தவெக எம்.எல்.ஏ பேரம் பேசும் விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் திமுக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பின்னடைவாகவும் பரபரப்பாகவும் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்கு செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் எப்போது ஆஜராவார்கள்? காவல் துறையின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் உற்றுநோக்கப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது.