IPL 2026: நூர் அகமது அபாரம்.. கொல்கத்தாவை 32 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
சென்னை: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்தது. சென்னை அணி பேட் செய்தது.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பினார். வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 48 ரன்கள் (4 சிக்ஸர், 3 பவுண்டரி) எடுத்தார். அவர் அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்திக் தியாகி பந்தில் ஆட்டமிழந்தார்.
இளம் வீரர் ஆயுஷ் மத்ரே வழக்கம் போல பவர்பிளே ஓவர்களில் கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்தார். அவர் வெறும் 17 பந்துகளில் 38 ரன்கள் (6 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
நடுவரிசையில் டெவால்ட் பிரெவிஸ் 41 ரன்களும் (29 பந்து), சர்பராஸ் கான் 23 ரன்களும் எடுத்து அணியின் ஸ்காரை வெகுவாக உயர்த்த உதவினர். இறுதியில் ஷிவம் துபே (ஆட்டமிழக்காமல் 13) மற்றும் ஜேமி ஓவர்டன் (ஆட்டமிழக்காமல் 7) ஜோடி சென்னை அணியை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களுக்கு கொண்டு சென்றது.
கொல்கத்தா தரப்பில் கார்த்திக் தியாகி சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுனில் நரைன் மற்றும் வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வந்தது. ஆனால் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் அசத்தி விட்டனர். குறிப்பாக நூர் அகமது அபாரமாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்களைச் சாய்த்தார். பீல்டிங்கில் சொதப்பினாலும் கூட பவுலர்கள் சென்னை அணியைக் காப்பாற்றி விட்டனர்.
160 ரன்களில்கொல்கத்தாவின் சேசிங் நின்று போனது. வெற்றிகரமாக தனது 2வது வெற்றியை சென்னை அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.