சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சென்னை : சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து கனமழையால் சென்னையில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையே காணப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்றும் காலையில் கடுமையான வெயில் இருந்த போதிலும், பகல் நேரத்திற்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஐயப்பந்தாங்கல், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
வட கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறி இருந்த நிலையில், சென்னையின் பல பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் பலவற்றில் தண்ணீர் தேங்க துவங்கி உள்ளது. சாலையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையில் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.