செட்டிநாட்டு அடுப்படி.. காரசாரமான நான் வெஜ் சுவையில்.. அசத்தலான பலாக்காய் பிரட்டல்!
- மணிமா
செட்டிநாட்டின் அனைத்து ரெசிபிகளுக்கும் மகத்தான வரவேற்பு தந்து மகிழ்விக்கும் இனிய உள்ளங்களுக்கு அன்புடன் வணக்கம் சொல்வது என்றென்றும் உங்கள் .........மணிமா.........
இன்று நாம் பார்க்கப் போவது பலாக்காய் பிரட்டல் ..பெயர்தான் மிரட்டலாய் இருக்கும். பலாக்காய் உடன் ஒரு மசாலா அரைத்து சேர்த்து செய்யப் போகிறோம்.
இந்த பலா செட்டிநாட்டு வீடுகளில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கொத்துக்கொத்தாக காய்க்கும். பெரிய பெரிய நகரங்களில் பழமுதிர்ச்சோலையில் குட்டி குட்டியாக கறிப்பலா என்று கிடைக்கிறது.
பலாக்காய் பார்ப்பதற்கு வெளியே கடினமாக தெரியும். ஆனால் செய்வதும் எளிது ருசியும் அபாரம். வாருங்கள் தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக்கொண்டு அதனுடன் அன்பையும் சேர்த்து சமைத்தால் செட்டிநாட்டு ரெசிபி தயார்
தேவையான பொருட்கள்.
பலாக்காய் 500 கிராம் அளவில் ஒன்று
(எனக்கு அளவில் பெரியதாக கிடைத்ததால் பாதி எடுத்துக் கொண்டுள்ளேன்)
சிறிய வெங்காயம் உரித்தது 20
பூண்டு பல் 20
தக்காளி 2
வற்றல் மிளகாய் எட்டு
சோம்பு அரை ஸ்பூன்
விரல் நீளம் தேங்காய் இரண்டு துண்டு
பொட்டுக்கடலை இரண்டு ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிதளவு
மீடியம் சைஸ் தக்காளி இரண்டு
ஒரு விரல் நீளம் பட்டை ஒரு பிரிஞ்சி இலை
நல்லெண்ணெய் ஒரு பெரிய குழி கரண்டி
செய்முறை
பலாக்காய் நறுக்குவதற்கு முன் கைகளில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். நறுக்கும் கத்தியிலும்தடவிக் கொள்ளவும். அதில் வரும் பால் போன்ற பிசு பிசுப்பு கையில் ஒட்டாமல் இருக்கும்.
நான்கு துண்டுகளாக அரிந்து கொண்டு மேல் பகுதிபச்சை நிறத்தில் முள் போன்று இருக்கும் தோல் பகுதியை செதுக்கி எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
குக்கரில் இரண்டு டம்ளர் அளவான தண்ணீர் வைத்து பலாக்காய் துண்டுகளை உள்ளே சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து பத்து நிமிட நேரம் வேக விடவும். ஆறியபின் வெயிட்டை நீக்கிவிட்டு அதில் உள்ள தண்ணீரை ஒட்ட வடித்து விடவும்.
அரைப்பதற்கு மிக்ஸியை எடுத்துக்கொண்டு அதனுள் மிளகாய் வற்றல் பொட்டுக்கடலை சோம்பு வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்வோம்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்த பின் கடுகு பட்டை பிரிஞ்சி இலை போட்ட பிறகு கருவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதையும் சேர்க்கவும் ஒரு கரண்டி அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
சிறிது நேரம் நன்கு பிரட்டி விட்டு பச்சை வாசனை போன பிறகு வேகவைத்த பலாக்காய் துண்டுகளை சேர்த்து மென்மையாக கிளறி விடவும். பத்து நிமிட நேரத்தில் எண்ணெய் பிரிந்து ஓரங்களில் வரும் பொன்னிறமாக மொறுமொறுப்பாக பலாக்காய் வந்த பிறகு தீயை அணைத்துவிட்டு எடுத்து பரிமாறலாம்.
பார்க்க பார்க்க பலாக்காய் துண்டுகள் மனதைக் கவரும்.
ரசிக்க ரசிக்க மட்டன் துண்டுகள் போல் நாவில் ருசி க்கும் ருசியான செட்டி நாட்டு பலாக்காய் பிரட்டல் ரெடி.
இது நெய் சாதம் குழம்பு ரசம் தயிர் சாதத்துடனும் சப்பாத்தியுடனும்.சேர்த்து சாப்பிட ஜோராய் இருக்கும். அடுத்த ஒரு சுவையான ரெசிபியுடன் மீண்டும் உங்களை எல்லாம் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து அன்புடன் விடை பெறுவது உங்கள் .....மணிமா ....