அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Meenakshi
Jul 10, 2025,02:32 PM IST

திருவாரூர்: அதிமுகவை மீட்க முடியாத பழனிசாமி தமிழகத்தை மீட்போம் என பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இரண்டாம் நாளான இன்று சுற்றுப்பயணத்தின் போது, திருவாரூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். அதன்பின்னர் திருவாரூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.846.47 கோடி மதிப்பீட்டிலான 1,234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 




திருவாரூர் நகர்ப் பகுதியில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய புதிய வணிக வளாகம். 

நன்னிலம் பகுதியில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும்.

மன்னார்குடியில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அரசு மகளிர் கல்லூரி தொடங்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால், ஆறுகள் ரூ.43 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

பூந்தோட்டம் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்த நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.


ஆகிய 6 புதிய அறிவிப்புகளை  திருவாரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


அதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், திருவாரூர் மாவட்ட மக்கள் அனைவருமே எங்களில் ஒருவன் என என்னை அன்போடு அழைக்கிறார்கள். கலைஞர் ஆட்சியின் நீட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி. திருவாரூர் என்றாலே தேரும், தலைவர் கலைஞரும் தான் நினைவுக்கு வரும். இந்த மண்ணில் பிறந்த கலைஞர் தான் தனது அறிவினால், ஆற்றலால் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று, தொலைநோக்குப் பார்வையால் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாட்டை 5 முறை ஆண்ட ஆரூர்காரர் கலைஞர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகள் கட்டக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இதுவரை பாஜகவுக்கு டப்பிங் குரல் கொடுத்த அவர் இப்போது ஒரிஜினல் குரலையே கொடுக்க ஆரம்பித்து விட்டார். அறநிலைத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்குவதற்கு பிரிவு இருக்கிறது. 


தமிழ்நாடு என்று சொல்லத் தயங்குகின்ற கூட்டத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார். அதனால் தான் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பயணம் செய்கிறார். அதிமுகவை மீட்க முடியாத அவர். எப்படி தமிழகத்தை மீட்பார். எடப்பாடி பழனிச்சாமி இடம்  இருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டு விட்டது. செய்த குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவர் தமிழ்நாட்டை பாஜகவிடம் அடகு வைத்தார் என்று தெரிவித்துள்ளார்.