கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Manjula Devi
Apr 26, 2025,08:32 PM IST

சென்னை: கல்விதான் நமக்கான ஆயுதம், எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டுவிட கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2024ம் ஆண்டிற்கான  தேர்வின் இறுதி முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் தமிழக்தைச் சேர்ந்த 57 தேர்ச்சி பெற்றனர். இதில் சிவகச்சந்திரன் என்பவர் தமிழகத்தில் முதலிடமும் இந்தியா அளவில் 23ம் இடமும் பெற்றுள்ளார். இந்நிலையில்,யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில்  பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ள உங்கள் எல்லோரையும் நான் முதலில் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்த வேண்டும். மாணவர்களுடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். பள்ளிக்கல்வி - கல்லூரிக் கல்வியைக் கடந்து, மாணவர்களுடைய திறனை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் எல்லாம் நினைத்தோம்.


அதிலும் குறிப்பாக வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பம் - அந்த வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி, நம்முடைய மாணவர்களுடைய Skills வளரவேண்டும். எப்படிப்பட்ட போட்டித் தேர்வாக இருந்தாலும், அதை Crack செய்கின்ற அளவுக்கு நம்முடைய மாணவர்களுக்குப் பயிற்சி கிடைக்கவேண்டும்; அதையும் நம்முடைய அரசே செய்யவேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம்.




இந்தத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களும் - இளைஞர்களும் நிச்சயமாக தங்களுடைய இலட்சியங்களை அடையவேண்டும்; வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டும்; வளர்ந்து வரவேண்டும்; என்பதற்காக தான் நான் முதல்வன் என்று பெருமைப்படக்கூடிய அளவுக்கு இந்தத் திட்டத்தை நான் முதல்வன் என்கின்ற அந்த அடிப்படையில் தான் இதை உருவாக்கி இருக்கிறோம்.


நான் முதல்வன் என்கின்ற தன்னம்பிக்கை ஊட்டுகின்ற பெயர் வைத்து, 2022-ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாள் அன்று தான் தொடங்கி வைத்தேன். உங்கள் மீதும், இந்தத் திட்டத்தின் மீதும் நாங்கள் வைத்த நம்பிக்கை பலனளித்திருக்கிறது என்ற செய்தியை பார்க்கின்றபோது மகிழ்ச்சியோடும், பெருமையோடும், நீங்கள் எல்லாம் எப்படி ஒரு பூரிப்புடனும், புலங்காகித உணர்வுடனும் கலந்து கொண்டிருக்கிறீர்களோ, அதேபோல தான் நாங்களும் இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக கலந்து கொள்ள வந்திருக்கிறோம்.


சாமானிய வீடுகளில், பிறந்து சாதனையாளர்களாக நாளைய வரலாற்றை எழுதக் கூடியவர்களாக வளர்ந்திருக்கின்றீர்கள். உங்களை பாராட்டுவதுதான், திராவிட இயக்கத்தின் வழிவந்திருக்கக்கூடிய எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!



கல்வி தான் நமக்கான ஆயுதம்! எந்த இடர் வந்தாலும், கல்வியை மட்டும் நாம் விட்டுவிடக் கூடாது! அதனால்தான், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தோம். அதைத் தொடர்ந்து புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், கல்லூரிக் கனவு திட்டம், சிகரம் தொடு திட்டம், உயர்வுக்குப் படி திட்டம் என்று ஏராளமான திட்டங்களை தொடங்கி, கல்வியைக் கொடுத்து, நான் முதல்வன் போன்ற திட்டங்களால் Upskill செய்து, பெரிய பெரிய நிறுவனங்களில் நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் Placement ஆனதை பார்க்கின்றபோது நாம் பூரிப்பு அடைகிறோம்.


தமிழ்நாட்டிற்கு என்று ஒரு அறிவுமுகம் இருக்கிறது! ஒரு ஐ.ஏ.எஸ் – ஒரு ஐ.பி.எஸ் தமிழ்நாட்டு கேடராக இருந்தால், அவர்களுக்கான மதிப்பே தனி! அதுவும் அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்களாக இருந்தால், இன்னும் மதிப்பு கூடுதலாகிவிடும்! ஆனால், கடந்த சில ஆண்டுகளாக UPSC தேர்வுகளில் நம்முடைய இளைஞர்கள் தேர்வாகிறது குறைந்துவிட்டது.


ஆனால், இன்றைக்கு அந்த கவலையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். குடிமைப் பணி தேர்வுகளுக்குத் தயாரான உங்களுக்கு, நம்முடைய அரசு எப்படியெல்லாம் பயிற்சி கொடுத்தது - ஊக்கம் கொடுத்தது - உங்களுடைய சுமைகளை குறைக்க ஊக்கத்தொகை எல்லாம் கொடுத்து, உங்களில் பலரும் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டிகளில் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்தோம். இதுவே, இன்னும் பல பேரை ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ்-ஆக Motivate செய்யவேண்டும்!


மற்றவர்களுக்கு உதவுவதற்கான உங்கள் பணியை, நீங்கள் தேர்வான அன்றைக்கே தொடங்கிவிட்டீர்கள். அதிகாரம் என்பது இந்தச் சமூகத்துக்கும் - சக மனிதர்களுக்கும் - எளியோர்களுக்கும் உதவுவதாக – அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுவதாக அமைய வேண்டும்.


இன்றைக்கு அதிகாரம் உங்கள் கைகளை நோக்கி வர இருக்கிறது. அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உங்களுக்கு Role model –ஆக பல பேர் இருப்பார்கள். இனிமேல் நீங்கள் பல பேருக்கு Roll Model ஆகவேண்டும் - அதுதான் என்னுடைய விருப்பம். இன்றைக்கு தேர்வாகி இருக்கின்ற நீங்கள் சிறப்பாக பணியாற்றுவதன் மூலமாக தான் அந்த நிலையை அடையமுடியும்.


என்னுடைய பொதுவாழ்க்கை அனுபவத்தில் இருந்து இதை சொல்கிறேன். முதலில் மக்களுடைய மனதில் இடம் பெறவேண்டும். சமூகநீதி - நேர்மை – துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடுங்கள். இந்த மூன்றையும் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றினால், மக்கள் நிச்சயமாக நம்மை மறக்கமாட்டார்கள்.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்று வள்ளுவர் சொன்ன மகிழ்ச்சியை, இப்போது நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கொடுத்திருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில், புறநானூறில் சொன்ன சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்ற கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள்.


நான் அடுத்த முறை உங்களை சந்தித்தாலும், உங்களுடைய பணிகளையும், சாதனைகளையும் சொல்லி வாழ்த்தவேண்டும்; அதுதான் என்னுடைய ஆசை. எனக்கு அந்த நம்பிக்கை உங்கள் முகங்களைப் பார்க்கும்போது நிச்சயமாக வருகிறது என்று தெரிவித்துள்ளார்.