திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Meenakshi
Sep 17, 2025,06:58 PM IST

சென்னை: திமுகவை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திராவிட சிந்தனைகளின் வேராக விளங்கும் தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று திராவிட மாடல் அரசு, சமூகநீதி நாள் என பெயர்சூட்டி ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.


இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,




அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் தடையாக இருப்பவைகளை அழித்திட வேண்டும் என்றார் தந்தை பெரியார்!


நமது திராவிட மாடல் அரசால், சமூகநீதி நாள் -எனக் கடைப்பிடிக்கப்படும் பெரியாரின் பிறந்தநாளில், இந்தியாவின் வளர்ச்சிக்கும் இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் பெரும் தடையாக இருந்து வரும் சாதிய ஏற்றத்தாழ்வை நீக்கி, அனைவரையும் சமமாக நடத்தி, அனைத்துத் தரப்பினரும் சமவாய்ப்புகள் பெற்ற சமூகமாகத் திகழத் தமிழ்நாடெங்கும் உறுதிமொழி எடுக்கப்பட்டது!


என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்! என்றார் பேரறிஞர் அண்ணா!


புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க என்று வளர்ந்திருக்கிறோம்!


ஓரணியில் தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்! என்று தெரிவித்துள்ளார்.