வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தூத்துக்குடி: இந்தியாவிலேயே வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு தான் என்று தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார வாகன விற்பனையை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி - மதுரை புறவழிச் சாலையில் சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் கார் உற்பத்திக்கான ஆலை அமைக்கும் வகையில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இந்த ஆலை மூலமாக ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கார் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். தூத்துக்குடியில் முதல் எலக்ட்ரிக் கார் விற்பனையை கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில், இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் 40 விழுக்காடு தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. நான் அடிக்கல் நாட்டி 17 மாதங்களில் தமிழ்நாட்டில் நிறுவனத்தை தொடங்கி பெருமை சேர்த்துள்ளனர். வின்ஃபாஸ்ட் ஆலையால் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொழில் பகுதியாக உருவாகும். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்தவர்களே வின்ஃபாஸ்ட் ஆலையில் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழ்நாட்டின் தொழிற்வளர்ச்சியை முதன்மையாக கொண்டு திராவிட மாடல் அரசு அதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தெற்காசியாவிலேயே வியட்நாமுக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் வின்ஃபாஸ்ட ஆலை இதுதான். சென்னை, காஞ்சி, கோவை, ஒசூரை தொடர்ந்து மோட்டார் வாகன தொழில் கூடமாக உருவெடுக்கிறது தூத்துக்குடி. ஹூண்டாய், நிசார், டாடா, பி.எம்.டபிள்யூ, ஒலா போன்ற நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியை தொடங்கியுள்ளன என்று தெரிவித்தார்.