சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
காஞ்சிபுரம்: தமிழ்நாடு தொழில் துறை முன்னேற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முக்கிய காரணமாகும். சிறு குறு தொழில் துறையில் நாட்டி் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், திமுக அரசை பொறுத்தவரை திட்டங்கள் எல்லாம் சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கத்தோடு இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய திட்டமல்ல. சாதிய பாகுபாடு, குலத் தொழிலை வெளிப்படையாக ஊக்குவிக்கும் என்று விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்தோம். பள்ளிப்படிப்பை முடித்த அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதை உறுதி செய்ய நாம் பாடுபடுகிறோம்.
மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தில் உள்ள அனைத்து குறைகளையும் நீக்கி திராவிட மாடல் அரசு கொண்டு வந்த கலைஞர் கைவினை திட்டம் பல கைவினை கலைஞர்களையும் வாழ வைக்கும் திட்டமாக இருக்கும். மானியத்துடன் கூடிய கடனுதவிகளை கைவினைக் கலைஞர்களுக்கு வழங்கும் திட்டம். இந்த திட்டமானது சம நீதியையும் சமூக நிதியையும் வளர்க்கும் திட்டமாக இருக்கும்.
1950களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம். கைவினைக் கலைஞர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுகிறேன். புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் ரூ.25,000லிருந்து ரூ.1 லட்சமா் உயர்த்தி வழங்கப்படும். காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழில்பேட்டையில் ரூ.3.9 கோடியில் பொது வசதி மையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.