அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக.... ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
சென்னை: இந்தியப் பொருட்களின் மீது அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்துள்ளதால், தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே இருந்த 25 சதவீத வரியுடன், தற்போது மேலும் 25 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு மொத்தம் 50 சதவீதமாகும். இந்த அதிகப்படியான வரியின் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 70 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்துள்ளது. இது தமிழகத்தில் ஏற்றுமதியை பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ரூ.3000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரின் வேலைவாய்ப்பு அபாயத்தில் உள்ளது.
இந்தச் சூழலில் தமிழக தொழில்துறை மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.