கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!

Meenakshi
Oct 03, 2025,06:28 PM IST

சென்னை: கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என்று கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய கீழடி அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 5ம் தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார்.


தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 15 நிமிட ஒளி - ஒலி காட்சிக்கூடம் உள்ளடக்கி 6 காட்சிக் கூடங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கான நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் அதிகளவில் வரும் வார இறுதி நாட்களில், பார்வையிடும் நேரத்தை  காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அதிகரித்து தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இங்கு வார விடுமுறை நாளாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.




இத்தகைய அருங்காட்சியகத்தை பார்வையிட்ட முதல்வர் இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 


கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்!


திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது #கீழடி அருங்காட்சியகம்.


வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டேன்.


கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது.


பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது.


கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது.


பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன.


நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்து வருகிறது நமது திராவிட மாடல் அரசு என்று தெரிவித்துள்ளார்.