தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்.. இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

Manjula Devi
Jun 02, 2025,06:28 PM IST

சென்னை: தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் 1976-ம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது முதல் பயணத்தை தொடங்கினார் இசைஞானி இளையராஜா. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளிவந்த பாடல்கள் காலத்தின் சகாப்தங்கள். இவரின் பாடல்கள் பலரின் மனதை மயக்கும் பாடல்களாக அமைந்துள்ளது. இவரின் பாடலைக் கேட்டால் தான் பொழுதே செல்லும் அளவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளமானோர் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். ‌ 


இளையராஜா கடந்த சில வருடங்களாக கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோவில்,தனது பிறந்தநாள் அன்று ரசிகர்களை நேரில் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று இசைஞானி இளையராஜா தனது 82 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அங்கு கேக் வெட்டி மகன் கார்த்திக் ராஜாவுக்கும், பேர பிள்ளைகளுக்கும் கேக் ஊட்டி  இளையராஜா பிறந்த நாளை கொண்டாடினார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி மலர் கொத்துக்களை கொடுத்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 




முதலமைச்சர் தனிச்செயலாளர் சண்முகம், இளையராஜாவின் இசையில் பல வெற்றிப் படங்களில் நடித்தவரான நடிகர் ராமராஜன் உள்ளிட்டோர் நேரில் சென்று இளையராஜாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேபோல் இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் நேரில் வந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் கோடம்பாக்கம் ஸ்டுடியோவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து தங்களின் அன்பை வெளிப்படுத்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


முதல்வர் மு.க ஸ்டாலின், இளையராஜாவுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி திரு. இளையராஜா  அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!


தங்களின் Symphony இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான் என்று பதிவிட்டுள்ளார்.