எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?. தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் எனப்படும் எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி திட்டம் இன்று தொடங்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இதனைத் தொடங்கி வைத்திருக்கிறார். பூத் கமிட்டி அளவில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் விதமாக இந்த பிரச்சாரத்தை திமுக கையில் எடுத்திருக்கிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன?
டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!
தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! என்று தெரிவித்துள்ளார்.