குழந்தைகள்.. இறைவன் கொடுத்த பொக்கிஷங்கள்!

Su.tha Arivalagan
Nov 14, 2025,01:22 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


குழந்தை என்றாலே பொக்கிஷம்.குழந்தையின் சிரிப்பினில் இறைவனை காணலாம்.


"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று "..


கவிஞர் கண்ணதாசன் எழுதிய இப்பாடல் வரிகளே போதும் குழந்தைகளை  விவரிக்க. குழந்தையின் மனதில் என்றும் கள்ளம் கபடம் இல்லை. குழந்தையை கண்டாலே , அதன் சிரிப்பை பார்த்தாலே நம் மனம் பூரிக்கும்.அதே போல் தான் தெய்வ சன்னதியில் நுழைந்ததுமே நம் மனம்  பூரிப்படைகிறது.


குழந்தைகளில் ஆண் குழந்தை,பெண் குழந்தை, தெய்வக் குழந்தை (special child) இவையாவும் இறைவன் நமக்கு கொடுத்த பொக்கிஷங்கள். இந்தக் குழந்தை பொக்கிஷங்கள் வீட்டில் இருந்தாலே மலர்கள் நிறைந்த தோட்டம் போல் வீடே  பூத்துக் குலுங்கும்.




தாயின் கருவில் இருந்து பிறந்து,பள்ளிக்குச் செல்லும் வரை குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு சேட்டைகளும், அவர்கள் பேசும் மழலை மொழியும்,அழுகையும், குறும்புத்தனமும், அடம்பிடிக்கும் குணமும், அன்பும்,முத்தமும், கொஞ்சும் பேச்சும்.. ரசிக்க ரசிக்க இனிமை. இவற்றிற்கு ஈடு இணையே இல்லை.


இந்த பொக்கிஷங்களை நாம் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து  வளர்ப்பது நம் கடமை. இன்றைய சின்னஞ்சிறு கரங்கள் தான்  பிற்காலத்தில் வல்லுனர்களாகவும் அறிவாளிகளாகவும் சரித்திரம் படைப்பவர்கள்.


இன்றைய குழந்தைகளுக்கு எது அவசியமானது என்பதை அன்புடன் விளக்கி, ஆரோக்கியமான உணவு, அமைதியான சூழலை உருவாக்கி  அவர்களை பேணிக்காத்து, வருங்கால தூண்களாகிய குழந்தைகளை போற்றுவோம். 


அனைத்து குழந்தை செல்வங்களுக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!


(எம்.ஸ்வர்ணலட்சுமி திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)