சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!

Su.tha Arivalagan
Apr 30, 2026,05:13 PM IST

- எம்.கே.திருப்பதி


கபில வஸ்துவின் 

காளைக் கன்று 

காலத்தை வென்ற இந்த

காவியக் குன்று!


சித்தார்த்தன் ஒருநாள் 

சீர்மிகு வீதிவழி போனான் 

ஆங்கு

உண்மையைக் கண்டு 

உன்மத்தன் ஆனான்!


நோயாளி ஒருவன்

நொடிந்து கிடந்தான் 

முதியவன் ஒருவன் 

முடங்கி  நடந்தான்!




சவம் ஒன்று 

சாலையில் சென்றது 

தவம் ஒன்று 

சிவம் என்று நின்றது!


குழப்பமான காட்சிகள்

குறுகுறுக்கச் செய்தது

வாழ்வு எதுவென

வழிதேட வைத்தது!


சித்தார்த்தன்

சித்தம் வேர்த்தான் 

ஏக தத்துவத்தில் 

எண்ணத்தைக் கோர்த்தான்!


காலடி நோக

கயா அடைந்தான்  

கால தத்துவத்தை 

கவனமாய் முடைந்தான்!


ஆறாண்டு எத்தனம் 

அகிலத்துக்கு ஈந்தது 

புத்த பூர்ணிமா என்னும் 

புத்தினம்!


மன்னன் சித்தார்த்தன் 

மகான் என மாறினான்

சத்திய வார்த்தைகளை 

முதன் முதலில் 

சாரநாத்தில் கூறினான்!


ஆழ அறிந்தவன் 

ஆசையே துன்பமென 

மொழிந்தான்!

புத்த போதனைகள் என்னும் 

புதுக்கருத்தில் 

புத்தருவியாய் வழிந்தான்!


புத்தன் பிறந்ததும் 

புத்தன் இறந்ததும் 

புத்தன் சிறந்ததும் 

புகழ் வாய்ந்த இந்த 

புத்த பூர்ணிமா 

இன்றுதான்!


நான் பாடுவேன்

மத்த பூரணிமா 

ஒத்த பூர்ணிமா 

இல்லை இந்த 

புத்தபூர்ணிமா 

என்றுதான்!


பூமிச் சித்தனே

அறத்தின் அத்தனே..!

ஆசிக்கிறேன் உன்னை 

அரவணை என்னை!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)