பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
- அ . கோகிலா தேவி
பெத்லஹேம்: இயேசுநாதர் அவதரித்த தலமான பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. கடந்த 2 வருடமாக இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடப்படாத நிலையில் இருந்தது நினைவிருக்கலாம்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இயேசு கிறிஸ்து பிறந்த புனித தலமான பெத்லகேம் நகரம் உள்ளது. இந்த ஊரில்தான் இயேசுநாதர் பிறந்தார். ஆனால் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரால் இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாவதுண்டு.
கடந்த 2 வருடமாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையிலான மோதல் காரணமாக கிறிஸ்துமஸ் இங்கு கொண்டாடப்பட முடியவில்லை. இந்த நிலையில் தற்போது அங்கு அமைதி நிலவி வருவதால் மீணடும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
காஸா போரினால் பெத்லஹேம் நகரில் தடைப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டமானது இந்த ஆண்டு போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து புதுப்பொழிவுடன் விழா கோலம் பூண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெத்லஹேமில் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரீகர்களின் வருகை முடங்கியதை ஒட்டி பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருந்தது. தற்போது மீண்டும் தன் இயல்பு நிலையை புதுப்பிக்க தொடங்கியுள்ளது.
மேங்கர் சதுக்கத்தில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் மரம் மீண்டும் ஒளிர தொடங்கியுள்ளது. இதுதான் நகரின் மையப் பகுதியாகும். இங்குதான் வழக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள் களை கட்டியிருக்கும்.
பாலஸ்தீன மக்களின் காயங்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியில் அமைதி மற்றும் நம்பிக்கையின் முன்னோடியாக இவ்விழா அமையும் என்று பெத்லஹேம் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கொண்டாட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
(அ . கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)