CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!

Su.tha Arivalagan
Sep 04, 2026,10:53 AM IST

டெல்லி:  காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளது. அமைப்பின் நிறுவனரான அபிஜீத் தீப்கேவுக்கு எதிராக, முன்னாள் தன்னார்வலர் மணீஷ் பிரம்மபட் தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்று காக்ரோச் ஜனதா கட்சி-டெமாக்கிரடிக் (CJP-D) என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.


புதுடெல்லியில் CJP-D அமைப்பைத் தொடங்கிவைத்து பேசிய மணீஷ் பிரம்மபட், அபிஜீத் தீப்கே தலைமையிலான CJP அமைப்பானது, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக இயங்கும் டீம் கெஜரிவால் போல செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இளைஞர்களின் இரத்தமும் வியர்வையும் சிந்தி உருவான இயக்கம், இப்போது கெஜரிவாலின் அரசியல் லாபத்திற்காகவும், பாஜகவை எதிர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சிஜேபியின் முக்கிய நிர்வாகிகளாக தேர்வாகியுள்ள 8 நபர்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்றார் அவர்.




முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சிஜேபி கட்சியின் தேசிய செயற்குழு அமைக்கப்பட்டபோது, களத்தில் போராடிய தன்னார்வலர்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை எனக்கூறி மகாராஷ்டிராவில் உள்ள தீப்கேவின் வீட்டிற்கு வெளியே பிரம்மபட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கரப்பான் பூச்சி கட்சி உருவான கதை


மே 16 அன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் ஒரு வழக்கில் இளைஞர்கள் குறித்துக் கூறியபோது கரப்பான் பூச்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். இதையடுத்து அபிஜீத் தீப்கே என்பவரால் இணையவழி கிண்டல் (satirical) இயக்கமாக CJP தொடங்கப்பட்டது. பின்னர் அது இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, தேர்வுத் தாள் கசிவு மற்றும் கல்வி முறை சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடும் அமைப்பாக உருவெடுத்தது.


அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த தீப்கே இந்தியா திரும்பியதும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தது இந்த கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி.


அபிஜீத் தீப்கே தனக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னர் தெரிவித்திருந்தாலும், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கெஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டது இந்த சர்ச்சையை வலுப்படுத்தியுள்ளது. பிரம்மபட்டின குற்றச்சாட்டுகளுக்கு அபிஜீத் தீப்கே தரப்பில் இருந்து இதுவரை எவ்விதப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை.