ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

Su.tha Arivalagan
May 14, 2026,12:54 PM IST

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முந்தைய அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றித் தொடரும் என்று தமிழக முதல்வர் விஜய் நேற்று சட்டசபையில் உறுதிபட தெரிவித்திருந்தார். அதன் படி மாணவர் உரிமை தொகை இன்று வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நாளை வருமா என்பது குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.


மாணவர்களுக்கு வழக்கம் போல் ரூ.1,000 உதவித்தொகை :


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்கள் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் எந்த மாற்றமும் இன்றித் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, மே 14, 2026 இன்று மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. 


முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த நலத்திட்டத்தை, தற்போதைய அரசும் தொடர்ந்து செயல்படுத்துவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்: 




மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் குறித்துப் பேசிய முதல்வர் விஜய், இத்திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தவும், தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்குச் சற்று அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.


இது குறித்து அவர் கூறுகையில், "மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய அவகாசம் வேண்டும். எனவே, மே மாதத்திற்கான உரிமைத்தொகை நாளை (மே 15) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாது. இருப்பினும், இந்த மறுசீரமைப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மே மாதத்திற்கான தொகை தகுதியுள்ள அனைத்துப் பெண்களின் வங்கி கணக்கிலும் விரைந்து வரவு வைக்கப்படும்" என்று உறுதியளித்தார்.


இந்த மகளிர் உரிமைத் தொகையை தவெக அரசு ரூ. 2500 ஆக உயர்த்தித் தரும் என்று தேர்தல் அறிக்கையில் அக்கட்சி கூறியிருந்தது. எனவே ஆட்சியின் முதல் மகளிர் உரிமைத் தொகையிலேயே அதை கொண்டு வர விஜய் விரும்புவதாக தெரிகிறது. அதனால்தான் உரிமைத் தொகை தருவது சற்று தள்ளிப் போவதாகவும் கூறப்படுகிறது.


மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், அதற்காகவே இந்த மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசுத் தரப்பு விளக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய எந்தவொரு பெண்ணும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.


மேலும் அரசின் நிதி நிலை குறித்து இன்று முக்கிய ஆலோசனைகளையும் முதல்வர் விஜய் மேற்கொண்டார். எனவே விரைவில் நல்ல செய்தி வரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


உரிமைத் தொகை எவ்வளவு?


மகளிர் உரிமைத் தொகை விரைவில் அளிக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், ஏற்கனவே திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது போல் மாதம் ரூ.1000 தருவீங்களா? இல்லை, நீங்க தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் மாதம் ரூ.2500 வழங்கப்படுமா? என சோஷியல் மீடியாவில் பலரும் கேட்க துவங்கி விட்டனர். ஆனால் இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.