கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரித கதியில் வழக்குப் பதிவு, விசாரணை.. முதல்வர் விஜய்
சென்னை: கடுங் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிவு செய்து, விரைவாக விசாரணை நடத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும். வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும். காவல்துறை. சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர முதல்வர் வலியுறுத்தினார். வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார். இ.ஆ.ப. உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ. அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ். இ.ஆ.ப. காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் சந்திப் ராய் ரத்தோர். இ.கா.ப. காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) முனைவர் மஹேஷ்வர் தயாள், இ.கா.ப, காவல்துறை கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) அனிதா ஹூசைன், இ.கா காவல்துறை தலைவர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) சி. ராஜேஸ்வரி. இ.கா.ப. காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) ஆஸ்ரா கர்க். இகாப காவல்துறை தலைவர் (சிங்கப்பெண்) கே. பவானீஸ்வரி. இ.கா.ப மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் சிறுமி ஒருவர் மிகக் கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் இதேபோன்ற வேறு சில நிகழ்வுகள் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. இந்த பின்னணியில் முதல்வரின் இந்த ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.