கோவையின் புதிய அடையாளம்... ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Meenakshi
Oct 09, 2025,06:22 PM IST

கோவை: கோவையில் தமிழகத்தின் மிக நீளமான ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.


தமிழகத்தின் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2020ம் ஆண்டு முதல் கோவை அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பாலம் கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு 1,791 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 


இந்த பாலம்  Precast segmental box girder என்ற நவீன பொறியியல் முறையில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, பின் பாலத்தில் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய உயர்மட்ட பாலம் என்ற பெருமையை பெறும் அவிநாசி மேம்பாலம், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய தொழில் மாவட்டங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும். 




கோவை நகர மையத்திலிருந்து விமான நிலையம் செல்லும் பயணம் வழக்கமாக 45 நிமிடங்கள் எடுக்கும் நிலையில், இனி அது 10 நிமிடங்களுக்குள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையின் புதிய அடையாளமாக மாறும் இந்த மேம்பாலத்திற்குப் புகழ்பெற்ற தொழிலதிபர் மற்றும் அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டது.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கான இன்று காலை சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்றார். பின்னர், கொடிசியாவில் நடைபெறும் ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, 39 நாடுகளைச் சேர்ந்த, 264 பிரதிநிதிகள் பங்கேற்கும் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, உப்பிலிப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்துவைத்தார். பின்னர், பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்றார். இதைத் தொடர்ந்து, சிட்கோ தொழிற்பேட்டை குறிச்சி வளாகத்தில் 126 கோடி ரூபாயில் அமையவுள்ள தங்க நகைப் பூங்காவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.